செல்லும் பாதை! | Motivation – Kavithai Kuzhal
முயற்சி – செல்லும் பாதை! | Motivation – Kavithai Kuzhal
வணக்கம்!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி மேற்கொள்பவர்கள் செல்லும் பாதையை சரியாக தேர்ந்தேடுக்க வேண்டும் என்பதை இப்பதிவானது விளக்குகிறது.
உலகத்தில் பிறந்த அத்தனை மனிதர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றே எண்ணம் கொள்கிறார்கள்.
தனது திறமையை வெளிப்படுத்துவதற்காக தன்னுள் குடி கொண்டிருக்கும் முழு அறிவையும் பலத்தையும் ஒன்றிணைக்கின்றனர்.
மனிதன் தனது திறமைக்கான அங்கீகாரத்தை உலகில் பெற வேண்டும் என்று முயற்சியை மேற்கொள்கின்றான்.
தனது திறமைக்கான மதிப்பை அவன் தர்ம வழியில் சென்று அடைந்தால், மேற்கொண்ட செயலானது மகிழ்வை உண்டாக்கும்.
ஆனால், தன்னை அதர்ம வழியில் உட்படுத்தி கொண்டால், அப்பாதையானது அவனுக்கு நீங்காத துன்பத்தையே நல்கும்.
தான் செல்லும் பாதையானது அதர்ம வழியில் இருத்தல் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செல்லும் பாதையை தேர்ந்தேடுக்கும் போது விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
தன்னுடைய பாதையை ஒரு நொடி பொழுதில் தேர்ந்தெடுத்துவிட்டு வாழ்க்கையை இழந்தோர் உலகில் பலராவர்.
தாம் மேற்கொள்ளப்படும் செயலானது, நல் வழியில் இருத்தலே காக்க செய்யும்.
அதுபோல, செயலை தேர்ந்தெடுக்கும் போதும் அது அனைவருக்கும் நன்மை செய்வதாகவே இருத்தல் வேண்டும். தீமை விளைவிக்கும் என்பதை அறிந்தால், அச்செயலை செய்யாமல் விடுதல் வேண்டும்.
தன்னுடைய வலிமையை நல் வழியில் செலுத்தினால் மட்டுமே, அது அனைவருக்கும் ஆக்கத்தை தரும்.
இல்லையென்றால், மேற்கொண்ட செயலானது அவனை மட்டும் பாதிக்கமால், அவனை பின் தொடர்ந்த அனைவருக்குமே, நீங்காத துன்பத்தை தரும்.
உலக வாழ்வில் முயற்சியை மேற்கொள்ளும் போது, சுய நலம் கொள்ளாமல் அனைவரின் நலம் கருதியே செயலை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யும் செயலே, அனைவருக்கும் நல்வழியை ஏற்படுத்தி தரும்.
மனித வாழ்வே அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்காக தான். செயலை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஊக்கத்தை அளித்தல் வேண்டும்.
எவன் ஒருவன் மற்றொருவன் திறமையைக் கண்டு பாரட்டுகின்றானோ, அவனே உலகில் மேன்மை பொருந்தியவனாக வாழ்கிறான்.
அனைவரிடத்திலும் பாரட்டும் பண்பானது உண்டானல், அனைவரது உள்ளத்திலும் பொறாமை, பேராசை, பகைமை போன்ற தீய குணங்களானது நீங்கும்.
ஒருவன் செல்லும் வழியே, உலகிற்கு அவன் யார் என்பதை காட்டும்.
இனி கவிதை குழல் மூலமாக முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் கவிதை படைப்பை காணுங்கள்.
பாதை முதல் இலக்கு வரை:
வாழ்க்கை பாதை என்பது
ஓடும் நீரை போன்றதாகும்!
அருவியில் இருந்து விழும்
நீரானது அடித்தளத்தில்
பாதையை உருவாக்கும்.
அதுபோல, கீழே விழுந்தாலும்
உன் பாதையை உருவாக்குவதை
நிறுத்தி விடாதே!
ஓடும் நீரானது இலக்கை அடைய
மேடு பள்ளங்களை கடக்கும்.
அதுபோல, நீ முயற்சிக்கும் போது
ஏற்படும் ஏற்ற இறக்கங்களை
கண்டு மனம் தளராதே!
நீரானது பயணிக்கும் போது
பாறைகள் தடுக்க முயலும்.
ஆனால் நீரானது தனது
இலக்கை அடையாமல்
நின்று விடாது.
எனவே பாறைகள் போன்று
பிரச்சினைகள் எழுந்தாலும்
இலக்கை அடைய முயற்சி கொள்.
நீரானது இறுதியில் கடலுடன் இணையும்.
உன்னுடைய இலக்கும் அனைவரையும் இணைக்க
கூடியதாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையின் ஆரம்பமும்
முடிவும் உன் கையில் தான்
உள்ளது என்பதை
என்றும் மறவாதே!
நன்றிகள்!
-கவிதை குழல்